இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தமிழக மக்களிடையேயும், அரசியல் தளத்திலும் போதிய புரிதல் இல்லை என்ற எதார்த்த நிலையை மாற்றி, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முக்கிய சந்திப்பு ஒன்று தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி சல்மான் ரியால் அவர்கள், தமிழ்நாடு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பேராசிரியருமான எம். எச். ஜவாஹிருல்லா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, ‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ என்ற நூல் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
ஒரே மொழியைப் பேசும் தொப்புள்கொடி உறவுகளாக இருந்தபோதிலும், இலங்கை தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் எதார்த்தப் பிரச்சினைகள் தமிழகத்தில் உரிய முறையில் புரிந்துகொள்ளப்படவோ அல்லது வாசிப்புக்கு உட்படுத்தப்படவோ இல்லை என்ற ஆதங்கம் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
உதாரணமாக, தமிழகத்தின் புதிய அரசியல் நகர்வுகளான நடிகர் விஜய்யின் த.வெ.க (TVK) கட்சி அரசியல் குறித்து இலங்கையர்கள் அறிந்து வைத்துள்ள அளவில் ஒரு துளிகூட, உலகையே உலுக்கிய ‘ஈஸ்டர் குண்டுவெடிப்பு’ சம்பவங்கள் குறித்து தமிழகத்தில் பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை என்ற அதிர்ச்சி உண்மையும் இச்சந்திப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் சில முக்கிய தமிழக ஆளுமைகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்:
பேராசிரியர் அ. மார்க்ஸ் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து நீண்டகாலமாக தமிழகத்தில் தொடர்ந்து பேசி வருகின்றார்.
சட்டத்தரணி தி. லஜபதி ராய்: இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட யுத்த பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து, மதுரையைச் சேர்ந்த சிரேஸ்ட வழக்கறிஞரான இவர் எழுதிய ‘வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்’ (நீலம் பதிப்பகம்) என்ற நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.
இலங்கை நூல்களையும், அங்குள்ள மக்களின் நிலவரங்களையும் தமிழகத்திற்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் பலர் நஷ்டங்களையும் கடந்து ஈடுபட்டு வருகின்றனர்
பாத்திமா புத்தகாலயத்தின் உரிமையாளரும், எழுத்தாளருமான தோழர் சப்ரி, இலங்கை நூல்களை தமிழகத்திற்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுப் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டார்.
நன்னூல் பதிப்பகத்தின் மணலி அப்துல் காதர், இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை தமிழகத்தில் வெளியிடும் பணியை அண்மைக்காலமாகச் செய்து வருகின்றார்.
லண்டனில் வசிக்கும் எம். பௌசர் காக்கா, ஆத்ம திருப்திக்காக நஷ்டத்தையும் பொருட்படுத்தாது இலங்கை நூல்களை தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடர்ந்து வருகிறார்.
சமூக மற்றும் இன நல்லிணக்கச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, இலங்கை முஸ்லிம்களின் உண்மையான பிரச்சினைகளைத் தமிழகத் தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்த நூல் கையளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருதரப்பு மக்களும் பரஸ்பரம் உண்மைகளின் அடிப்படையில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
