தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம் நகரம் தொடர்ந்து முன்னேறும் வகையில், புத்தளம் மாநகர சபை மற்றும் ‘புத்தளம் மோட்டார் ரேசிங் கிளப்’ (Puttalam Motor Racing Club) இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த “Puttalam Motor Rush Championship 2026” தேசிய மோட்டார் பந்தயப் போட்டிகள், புத்தளம் இஜ்திமா மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இலங்கையின் மோட்டார் விளையாட்டுத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்த இந்த பிரம்மாண்ட நிகழ்வில், புத்தளத்தின் உள்ளூர் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த ஏராளமான முன்னணி போட்டியாளர்கள் மற்றும் மோட்டார் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவ்வாறான தேசிய மட்டத்திலான விளையாட்டு நிகழ்வுகள் புத்தளம் நகரின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு புதியதொரு உயிரூட்டலாகவும், உந்துசக்தியாகவும் அமைகின்றன.
மேலும், புத்தளம் நகரை தேசிய அளவில் ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் விளையாட்டு மையமாக அடையாளப்படுத்துவதற்கும், நகரின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் இத்தகைய பாரிய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படுவது மிகவும் அவசியமானதாகும் என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“Puttalam Motor Rush Championship 2026” வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தங்களது முழுமையான பங்களிப்பையும், ஆதரவையும் வழங்கிய அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்,பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர்,போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள்,திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்கள்,திரளாக வருகை தந்து ஆதரவளித்த பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் புத்தளம் மாநகர சபை தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
தேசிய மோட்டார் பந்தய வீரரான கமால்தீன் ஹம்தான் அவர்கள் 125CC போட்டிகளில் முன்னணி தேசிய வீரர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.


