‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி யை அங்கீகரித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த உதவி யானது அதன் சாதாரண மூலதன வளங்களிலிருந்து 100 மில்லியன் டொலர் சாதாரண கடன் மற்றும் 100 மில்லியன் டொலர் சலுகைக் கடன் (Concessional Loan) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
அத்துடன், திட்டச் செயலாக்கம், தயார்நிலை மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக 500,000 டொலர் தொழில்நுட்ப உதவி மானியமும் (Technical Assistance Grant) இதனுடன் வழங்கப்படவுள்ளது.
‘தித்வா சூறாவளிக்கு பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவுத் திட்டத்தின்’ கீழ், சேதமடைந்த வீதிகள் மற்றும் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும், பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், கடுமையான சேதமடைந்த அல்லது முற்றாக அழிந்த வீடுகளை மறுசீரமைக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
