இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் உயர்த்தியதைத் தொடர்ந்தே, பாணின் விலையை இவ்வாறு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் நியாயமான முறையில் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
