களுத்துறை மாவட்டம், அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பலாந்தை பிரதேச முஸ்லிம் சமூகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் சமூகப் பங்களிப்பை வெளிக்கொணரும் “பலன்புர முஸ்லிம்கள்” வரலாற்று நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 13, 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணிக்கு பலாந்தையில் நடைபெறவுள்ளது.
எழுத்தாளர் மொஹமட் நஸ்ரான் அவர்களின் கன்னிப் படைப்பான இந்நூல், பலாந்தை பிரதேச முஸ்லிம்களின் வாழ்வியல், கல்வி-சமூக வளர்ச்சி மற்றும் பல தலைமுறைகளாகச் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே பேணப்பட்டு வரும் இன நல்லிணக்கம் ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளது.
இலங்கை வரலாற்றில் புகழ்பெற்ற படைத்தளபதியான வீதியபண்டாரவின் (Weediya Bandara) வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புபட்ட பலாந்தை பிரதேசத்தில், முஸ்லிம் சமூகம் ஆற்றிய பங்கை ஆவணப்படுத்தி எதிர்காலச் சந்ததியினருக்குக் கொண்டு சேர்ப்பதை இந்நூல் முதன்மை நோக்கக் கொண்டுள்ளது.
பிரதேச அரசியல் தலைவர்கள், மதப் பெரியோர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, களுத்துறை மாவட்டத்தின் பிரதேச வரலாற்றுப் பதிவில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
