குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர அவர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
ஷானி அபேசேகர அவர்களை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு குறித்த உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர அவர்களை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவரது பணிநீக்கக் காலம் முதல் இதுவரை இழக்கப்பட்ட அனைத்து நிலுவைச் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷானி அபேசேகர அவர்கள் கைது செய்யப்பட்டார்.
அவர் 11 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஷானி அபேசேகர அவர்களை பிணையில் விடுவித்தது.
2024 ஆம் ஆண்டு அவர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
