இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள என்.ஜி.ஓ (NGO) சட்டமூலம் தொடர்பில் விரிவான பரிசீலனைகளை மேற்கொண்டு, அதுகுறித்த எழுத்துமூல கருத்துக்களையும் பரிந்துரைகளையும் விரைவாகச் சமர்ப்பிக்குமாறு இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள், சட்ட நிபுணர்கள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளணத்தின் தேசியத் தலைவரும், தேசிய சூரா சபையின் அரசியல் விவகாரக் குழுக்களின் தலைவருமான MNM ஷாம் நவாஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலமானது சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் சுயாதீன அமைப்புகளின் நிதியீட்டம், நிர்வாகம், சுயாதீனம் மற்றும் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முக்கிய பரிந்துரைகள்:
-
முன்மொழியப்பட்டுள்ள NGO சட்டமூலத்தின் பிரதிகளைப் பெற்று, அதன் முக்கிய ஏற்பாடுகளைக் கவனமாக ஆராய வேண்டும்.
-
அமைப்புகளின் சுயாதீனம், அடிப்படை உரிமைகள், சங்கம் அமைக்கும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் நிதி திரட்டல் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய மறைமுக மற்றும் நேரடித் தாக்கங்களைக் கண்டறிய வேண்டும்.
-
தேவையற்ற நிர்வாகச் சுமைகள் அல்லது சட்டபூர்வமான குடிமைச் செயற்பாடுகளுக்கு வரம்புகளை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்குமுறை நடைமுறைகள் அமைந்துள்ளனவா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
-
பொதுவான கருத்துக்களை மட்டும் தெரிவிக்காமல், சட்டமூலத்தின் குறிப்பிட்ட பிரிவுகளைச் சுட்டிக்காட்டி ஆதாரபூர்வமான எழுத்துமூல யோசனைகளையும் திருத்தங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த முயற்சியானது NGOகளுக்கான நியாயமான ஒழுங்குமுறை அல்லது பொறுப்புக்கூறலை எதிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மாறாக புதிய சட்டக் கட்டமைப்பு அமைப்புகளின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் வகையிலும், நியாயமான செயற்பாட்டு வெளியை உறுதிசெய்யும் வகையிலும் அமைவதையே நோக்கமாகக் கொண்டது என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டமூலம் நாட்டின் ஒட்டுமொத்த சிவில் சமூகத்தையும் பாதிக்கும் என்பதால், ஏனைய சமூகங்களைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இதனைத் தத்தமது சுயாதீனக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
